மீண்டுமொரு தொடக்கம்

இனி சகோதரன் வலைப்பூவில் தொடராக

அன்பர்களுக்கு,

இந்த வலைப்பூவினை 2010 ஏப்ரல் மாதம் தொடங்கினேன். அதன் பின் சில இடுகைகள் மட்டுமே என்னால் இட முடிந்தது. போதிய வரவேற்பு இல்லாததால் மனம் இதில் ஈடுபட மறுத்து கவணம் வேறு பக்கம் சென்றது. சகோதரன் வலைப்பூவில் அவ்வப்போது எண்ணங்களை பகிர்ந்து வந்தாலும், இந்து மதம் பற்றிய தேடல்களும் சில பொக்கிசங்கள் கிடைப்பதும் நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் அதை எழுதுகின்ற உந்துதல் வராமல் போனது.

இந்நிலையில் ஒரு ஆர்.எஸ்.எஸ் நண்பர் கடந்த நாட்களில் தொடர்பு கொண்டு தாங்கள் வெளியிடுகின்ற புத்தகத்தில் இந்தக்கட்டுரைகளை வெளியிட விருப்பம் தெரிவித்தார். மகிழ்ச்சியுடன் ஆச்சரியமும் வந்தது. இந்த தளத்தினை நான் மறந்தே போயிருந்தேன். ஆனால் இன்று என் பெயரை தாங்கி அந்த புத்தகங்களின் கட்டுரையாக வரும் அளவிற்கு இந்தக் கட்டுரைகளுக்கு வலிமை இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

மீண்டும் இந்த தளத்திற்கு வரும் போது, அதிர்ச்சியாக இருந்தது. வெறும் நான்கே நான்கு கட்டுரைகள் மட்டுமே எழுதியிருக்கிறேன். இந்து மதத்தின் ஞான மரபுகளை இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். தேவனூர் என்ற திருவண்ணாமலைக்கு அருகே உள்ள இடத்தில் மகாதேவனார் கோவில் சிதலமைடைந்து கிடந்த நிலையில் இருக்கிறது. அதனை சில அன்பர்கள் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது அங்கு சென்றேன். அந்த ஒரு கோவிலில் மட்டுமே அத்தனை பொக்கிசங்கள்,கலைகள்,கட்டுமான திறன், வரலாறு என்று ஏகம் இருந்தன.

நமது உலகில் இருக்கும் கோடிகோடியான பொக்கிசங்களை மீண்டும் தேடவும், தேடியதை தரவும் உறுதி கொண்டேன். இந்த முயற்சி எல்லா தரப்பு மக்களையும் சென்றய சகோதரன் வலைப்பூவிலே தொடராக எழுதலாம் என்றும், பின் அவற்றை தனியாக இங்கே தொகுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

நன்றி,.

அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.


வித விதமாய் கடவுள்கள்





இன்றைய கோவில்களின் நிலைமை



தெருக் கோவில்களின் நிலையை சென்ற இடுகையில் பார்த்துவிட்டோம். இப்போது பெரிய கோவில்களின் இன்றைய நிலையை காண்போம்.

இன்று பெரிய கோவில்கள் ஒரு வணிக நிறுவனம். வாசலில் செருப்பை அவிழ்த்துப் போடுவதில் துவங்கி, ஒவ்வொரு பத்தடிக்கும் ஏதோ காரணம் சொல்லிப் பணம் கறக்கும் வித்தைக் கூட்டமே தெரிந்து வைத்திருக்கின்றது. அர்ச்சனை, அபிசேகம் என தொடங்கி, மாதம் முழுதும் செய்ய வருடம் முழுதும் செய்ய என பணம் பிடுங்குவதில் குறியாக இருக்கின்றது.

மக்களிடமிருந்து காசுகளை வாங்கிக் கொண்டு அவர்களையே வேலி வைத்துக் கொண்டு வரிசைப்படுத்துகின்றது. விழாக் காலங்களில் எறும்புகளைப் போல வரிசையாக கோவில் வாசலிலிருந்து கருவரை வரையும், பின்பு கருவரையிலிருந்து வாசல் வரையிலும் வேலியில் நகர்கின்றார்கள் மக்கள். தரிசனத்திற்கு முதல், இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள், சிபாரிக் கடிதங்கள், கையூட்டு, பல் இளிப்பு என நடைமுறைத் தந்திரங்களின் கூடாரமாகி விட்டது கோவில்.



இப்போது பிரார்த்தனைகள் என்பவை வெறும் சடங்கு அவ்வளவுதான். எனவே தெய்வத்தை தவிர அங்கு கவணிப்பதற்கு ஏதுமில்லாமல் போய்விட்டது. கோவிலுக்கு செல்லும் ஒரு சதவீத மக்கள் கூட சிற்பங்களையோ, ஓவியங்களையோ, பிரகாரச் சுவர் முழுக்க செதுக்கியிருக்கும் கல்வெட்டுகளையோ பார்ப்பதேயில்லை. சில இடங்களில் ஒழுங்கு வேலி அமைக்க நல்ல கலைப் படைப்புகள் சிதைக்கப் பட்டிருக்கின்றன. மற்ற சில இடங்களிலோ பாதுகாப்பு என்று பெயரில் இரும்பு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றன.

பலரும் பார்க்க வேண்டுமென எண்ணி எண்ணி செதுக்கிய அந்தச் சிற்பிக்கும், உயிர் கொடுத்த வரைந்த ஓவியனுக்கும் செய்யும் நன்றி இது தானோ!. இது போதாதென சில வள்ளல்கள் செய்யும் கொடுமை அளவிடமுடியாது. எல்லா கோவில்களிலும் எரியும் டியூப் லைட்டிலிருந்து மின்சார மணி வரை உபயதாரர்களின் பெயர்கள் முழு முகவரியோடு, முடிந்தால் கைப்பேசி எண்களோடும் காணப்படுகின்றன. சில கோவில்களில் கருவரையில் இருக்கும் கடவுளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் உபயதாரர்களின் பெயர்களே இருக்கின்றன.

கலையும், மனிதர்களும் வாழ்ந்த இடமாக இருந்த கோவில்கள், இன்று பணம் பிடுங்கும் மிருகங்களாலும், எதைக் கொடுத்தாவது தங்கள் பிராத்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் இரக்கமற்றவர்களாலும் நிரம்பிக் கிடக்கின்றது. இதையெல்லாம் பார்க்கும் போது கடவுள் கோவிலிருந்து வெளியேறி வேறு இடம் தேடிக் கொண்டிருக்கின்றானோ எனத் தொன்றுகிறது.

இந்தக் காலத்தில் கோவில்கள்



பல்வேறு சிறப்புகளை கொண்ட அந்தக் கால கோவில்களைப் பற்றி பார்த்தோம். மேலே இருக்கும் இந்தப்படத்தைப் பார்த்தாலே இன்றைய கோவில்களின் நிலை பலருக்கும் புரியும். மிகப்பெரிய கோவில்களைப் பராமரிக்க இப்போது நம்மால் முடிவதில்லை. அதனால் நமக்கு ஏற்றவாறு கோவில்களை மாற்றிக் கொண்டோம்.

அந்த மாறுதல்களில் பழமையான விசயங்கள் அனைத்தையுமே நாம் மறந்து விட்டோம். கடவுள் இருக்கும் இடமாக மட்டும் அந்தக் காலத்தில் கோவில்கள் உருவாக்கப்படவில்லை. மக்களுக்கு வாழ்வாதரம் தரவும், பொழுது போக்கிற்கிற்காவும், நம்பிக்கை ஊட்டுவதற்காகவும் என அடுக்கிக் கொண்டே போகலாம். பழங்கால கோவில்களை பராமரிக்க இயலாமல் போனாலும், இந்த அடிப்படை விசயங்களையாவது நாம் பாதுகாத்து இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் நாம் தவறவிட்டுவிட்டோம்.



ஒரு சிறிய அறை. அந்த அறையில் ஏதேனும் ஒரு கடவுள் உருவம். இது தான் இன்றைய நவீன கோவில்கள். அதுவும் அந்தக் கோவில்களுக்கென தனியான நிலம் ஒதுக்கி கட்டுவதில்லை. சாலைகளில் மக்கள் நடப்பதற்கென உள்ள பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படுகின்றது. மக்களுக்கு உதவுவதற்காக கட்டப்பட்டுகின்ற கோவில்களின் அடிப்படையே இங்கு சிதறிப் போய் காணப்படுகிறது.

பல ஆயிரம் மக்களுக்கு பயன்படுகின்ற இடமாக இருந்த கோவில்கள். இன்று மக்களின் போக்குவரத்திற்கு இடையூராக இருக்கின்றன. அடிப்படையான விசயமே பாதிக்கப்பட்டுவிட்டதால், கோவில்களில் வாழ்ந்த கலைகளும், அதனை நம்பி வந்த கலைஞர்களும் இன்று காணமல் போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

நீங்கள் தெருக் கோவில்களைப் பற்றி சொல்லுகிறீர்கள். பழம்பெருமை வாய்ந்த கோவில்கள் இன்றும் இயங்கிக் கொண்டுதானே இருக்கின்றன என்று எண்ணுகிறீர்களா?. அடுத்த இடுகை அந்தக் கோவில்களில் நடக்கும் கொடுமைகளைப் பற்றிதான்.

அந்தக் காலத்தில் கோவில்கள்


கோயில் வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல. அதன் மூலமாக இசை, கலை, மருத்துவம், சிறுவணிகம் என்பவைகளும் ஒன்றோடு ஒன்றாக கலந்திருக்கின்றன. போக்கிடம் இல்லாதவர்களுக்கான இடமாகவும், மக்கள் கூடும் வெளியாகவும் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. காலத்தின் சாட்சியாய், கோடிக்கணக்கான மனிதர்களின் ஆசைகளை சமர்ப்பிக்கும் இடமாக இருந்துள்ளன கோயில்கள்.

ஓதுவார்களின் தேவாரப்பாடல்களும், நடன மங்கைகளின் நாட்டியங்களும், நாதஸ்வர, மேளதாளங்களின் சங்கம இசையும், படப்படக்கும் புறாக் கூட்டங்களும், காண காண திகட்டாத சிற்பக்கலைகளும், பண்டாரங்களின் ஞானப்பாடல்களும், எண்ணைய் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் தெரியும் மயக்கமான தோற்றத்தையும், மனதை நிறைக்கும் மணி ஓசையையும், சந்தன விபூதி மணமும், வீதியில் அசைந்துபோகும் தேரும் , திருவிழாவும், மக்களோடு மக்களாய் ஒன்றி இருந்தன.

ஒவ்வொரு கோவிலுக்கும் சொந்தமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலம் உண்டு, நேந்து விடுபவர்களால் மாடுகளும், ஆடுகளும், கோல்களும் நிரம்பி வழிய அதை விவசாயிகளும், ஆடு மாடு மேய்ப்பவர்களும் பார்த்துக் கொண்டார்கள். அந்தக் கால வாழ்க்கை முறையில் ஒரு சிறந்த கணக்கியல் வல்லுனனாக கூட கோவில் இருந்துள்ளது.

மாடுகளை மேய்ப்பவனுக்கு அதற்கான நிலமும் கோவிலில் கொடுக்கப்பட்டது. அந்த மனிதன் கடவுளுக்கு நெய்வெய்தியம் செய்ய வேண்டிய பாலை மட்டும் கொடுத்துவிட்டு, மாட்டையும், நிலத்தையும் அனுபவிக்கலாம். அவன் சரியாக பாலை கொடுக்காத பட்சத்தில் அந்த நிலமும், மாடுகளும் பரிக்கப்படும். இது ஒரு எடுத்துக் காட்டு மட்டும் தான். இப்படி ஏகப்பட்ட நுட்பமான கோட்பாடுகள் உண்டு.

ஓதுவார்கள், பண்டாரங்கள், நாட்டிய கலைஞர்கள், சிற்பிகள், ஓவியர்கள், இசை மேதைகள், புலவர்கள், சுத்தம் செய்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள், விவசாயிகள், பூ வியாபாரிகள் என கோடிகோடியான மக்களுக்கு வாழ்வாதமாக விளங்கியுள்ளன அந்தக்கால கோவில்கள். இங்கு வியாபாரிகளில் பூ வியாபாரிகள் என குறிப்பிட்டு சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் நம்முடைய பூஜை முறையே பூவை கடவுள் மீது போட்டு வணங்குவது தான்.

ஒட்டுமொத்தமாக சமூகம் முழுமைக்கும் பயன்பட்டுவந்த இந்தக் கோவில்களி்ன் இன்றைய நிலையைப் பற்றி அடுத்த இடுகையில் காண்போம்.

இந்து மதம் ஒரு பொக்கிசம்




இறையின் மகிமையையும், இயற்கையின் மகிமையும் உணர்ந்த ஒரு மதம் நிச்சயம் பொக்கிசம். அதை இந்து மதம் உணர்ந்திருக்கிறது.

அதனோடு இணைந்து நாமும் உணரவே இந்த வலைப்பூ.

நண்பர்கள் மற்றும் உங்களின் வழிகாட்டுதலுடன், இது நிச்சயம் நடக்கும் என எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்,

சகோதரன் ஜெகதீஸ்வரன்.

Blogger Template by Blogcrowds